Breaking

Sunday, April 30, 2017

Pullamangalam Kasi Viswanathar Temple


  புள்ள மங்கலம்(புள்ளைகாசி ) காசி விஸ்வநாதர் கோயில்
மூலவர் : காசி விஸ்வநாதர்
அம்மன் /தாயார் : ஸ்ரீ விசாலாக்ஷி தேவி
பழமை :1000 வருடங்களுக்கு மேலாக
தீர்த்தம் : மணிகர்ணிகா கங்கை தீர்த்தக் குளம் மற்றும் மங்கள கங்கை தீர்த்தம்
ஊர் : புள்ள மங்கலம்
மாவட்டம் :திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
புராண பெயர் : புள்ள மங்கலம் புள் + மங்கலம் புள் என்பது பறவை ஆகும் அதாவது பட்சிராஜா எனும் புள்அரசன் கருட மூர்த்தியை குறிப்பதாகும். மங்கலம் என்பது கருட மூர்த்தி தன் தாயின் நலனுக்காக, மங்கல சுபிட்சத்திற்காக ஆற்றிய சேவைகளை குறிக்கும். புள்ள மங்கலம் பெயர்வர இதுவே காரணமாக அமைந்தது.
தல சிறப்பு : காசி, கயாவிற்குச் சென்று முன்னோர்களுக்கான பிதுர் காரியங்களைச் செய்ய இயலாதோர்க்கு உதவி செய்ய மாமுனிவரான விஸ்வநாத மஹரிஷி அகஸ்தியர் மங்கல மஹரிஷி மாங்கல்ய மஹரிஷி ஆகியவர்கள் மற்றும் ரிஷிகளும் சேர்ந்து ஐந்து மோட்சத் தலங்கள் ஏற்படுத்தினர். காசி வழிபாட்டில் ஒருபலத்தைத் தரும் புள்ளைகாசி என்று போற்றப் பெறும் புள்ள மங்கலம். சேதுகாசி பெரும் பலம் புள்ளைகாசி ஒருபலம். என்றும் போற்றப்படுகிறது.
தல பெருமை : கருடாழ்வார் அமிர்தக் கலசத்தை தாங்கி பிரபஞ்சத்தில் வலமும் வந்தவர் அல்லவா. இதன் பயனாயும் இவ்வரிய சேவை கருடனுக்கு புள்ளமங்கலம் தலத்தில் அளிக்கப் பெற்றது. பல ரிஷிகள் கொண்டு புள்ளமங்கலத்தில் பூஜைகள் இயற்றப்பட்டது. பூஜைக்கு தேவையான தைலம், பூக்கள், தேனுக்காய் , போன்றவை கருட மூர்த்தி எடுத்து வருவார். தேன், தேனீக்கள் அனுமதி பெற்று கருட மூர்த்தி தேன் கூட்டையே சுமந்து வருவார் தேனீக்களும் ஆனந்தத்துடன் கருடன் பின்னே பறந்து வரும். தேன் கூட்டை  கொண்டு வந்து இத்தலத்தில் தவக்குடில்களை கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ரிஷிகள், ரிஷிகாக்களுக்கு அளித்து வந்தார். கருடன் கொண்டு வரும் தேன் குடுவையில் இருந்து தேன் இறைவனுக்கு அபிஷேகம் மற்றும் யாகத்திற்க்கு பயன்படுத்தப்படும். எஞ்சியுள்ள தேன் மெழுகை காய்ச்சி பீடத்தில் சார்த்துவர். இவ்வாறு பல கோயில்களுக்கு தேன், தேன் குடுவை, தேன் மெழுகைப் பீடத்தில் சார்த்தும் கைங்கர்யத்தையும் கருட மூர்த்தி செய்து வந்தார். கருடாழ்வார் தன் தாய் வினதை.தந்தை காஸ்யப ரிஷியோடு புள்ளமங்கலத்தில் சில காலம் தங்கி வழிப்பட்டுள்ளார்.
தல வரலாறு : பழம் பெரும் மாமுனிவரான விஸ்வநாத மஹரிஷி அகஸ்தியர் மங்கல மஹரிஷி மாங்கல்ய மஹரிஷி முன்னிலையில் புள்ளமங்கலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன காசி விஸ்வநாதர் லிங்கம். சேதுகாசி பெரும் பலம் என்றால் புள்ளைகாசி  (புள்ளமங்கலம்)ஒரு பலம் ஆகும்.
காசியில் அருளும் ஸ்ரீ விசாலாக்ஷி தேவி புள்ளமங்கலத்தில் தவம் பூண்டிருந்த அபாந்தரதமஸ் ரிஷியின் கடுந்தவத்தை மெச்சி, புள்ளமங்கலத்தில் நேரடியாக தோன்றி காட்சி அளித்தார். இத்தலத்தில் தவம் பூண்ட சூரிய புதல்வி பிரசன்னாம்பாவிற்கு பூவுலகப் பெண்கள் குலத்தின் நல்வாழ்விற்காய் அருளும்படி செய்தார்.
புராண பூர்வமாக ஜடாயு, குருவி ராமேஸ்வரத்துக் குருவி, வலியன் குருவி போன்ற பட்சிகள் மனிதர்களை போன்று ஆழ்ந்த பக்தி கொண்டு முக்தி நிலையை அடைந்துள்ளார்கள்.ஜடாயுவின் சகோதரப் பறவையான சம்பாதி இராமாயணத்தில் சிறப்பான பங்கை வகிப்பதை நாமறிவோம் . இப்புனிதமான புள்கள்(பறவைகள்) எல்லாம் தவம் பூண்டு வழிபட்ட தலம் புள்ளமங்கலம்.
  ஒரு சமயம் காடுகள் பற்றி எரியும் போது சாரங்கப் பறவைகள் தம் நான்கு குஞ்சுகளைத் தூக்க இயலாமல் காட்டு நெருப்புக்குள் விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிடவே அவை அக்னித் துதிகளை ஓதி ஸ்ரீ கிருஷ்ணரைச் சரணடைந்தன.பரமாத்மா தன்னை சரணடைந்தோர் அனைவரையும் காக்கும் சரணாகதி ரட்சகர் ஆயிற்றே. நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அகண்ட காடு பற்றி எரிந்த போதும் அந்நான்கு குஞ்சுகள் பாதுகாப்புடன் இருந்தன. காரணம் என்ன? அவற்றின் பெற்றோர் (சாரங்கப் பறவைகள் ) முன்பு புள்ளமங்கலத்தில் தங்கி இருந்த போது. இங்கு அப்போது தவம். புரிந்து கொண்டிருந்த மங்கலரிஷிக்கு சேவை செய்த காரணத்தால் அப்பறவைகளின் பிராத்தனையை மங்கல ரிஷியின் காதுகளில் விழும்படி கிருஷ்ணபரமாத்மா ஏற்பாடுகளைச் செய்தார். பரமாத்மாவின் லீலைக்கு எல்லை ஏது?
   தம் இறைவழிபாட்டிற்காய்ச் சேவைகளை ஆற்றிய அப்பறவைகளின் குலத்தைக் காப்பதற்காய் மங்கல மாமுனிவர் புள்ளமங்கலத்தில் இருந்த படியே நான்கு சாரங்கக் குஞ்சுகளையும் காட்டில் கொழுந்து விட்டு எரியும் நெருப்புக் கனலில் இருந்து காப்பாற்ற தன் பூஜையில் இருந்து தர்ப்பையை பயன்படுத்தி காப்பாற்றினார்.
  •     இப்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது கூடிய விரைவில் திருபணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடைபெற இறைவனை பிராத்திப்போம். நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். ஓம் நமசிவாய

No comments:

Post a Comment