Breaking

Saturday, February 24, 2018

நாச்சியார் கோவில் அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில் - Sri Tirunarayur Nambi temple Nachiyar koil

       நாச்சியார் கோவில் அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்

  

       மூலவர்:திருநறையூர் நம்பி (சீனிவாச பெருமாள் )
உற்சவர்:இடர்கடுத்த திருவாளன்
அம்மன்/தாயார்:வஞ்சுளவல்லி
தல விருட்சம்:வகுளம் ( வஞ்சுளம்)
தீர்த்தம்:மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
ஆகமம்/பூஜை:வைகானஸம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:சுகந்தகிரி க்ஷேத்ரம்
ஊர்:நாச்சியார்கோயில்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
    பொதுவான தகவல் :
                                     ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதை காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார் கோவில்’ எனப்பெயர் பெற்று விளங்குகிறது. முற்காலத்தில் இந்த ஊர் ‘திருநறையூர்’ என்று அழைக்கப்பட்டது.
இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்ட தாகும்.
ராஜகோபுரம்
சோழர் காலத்தில் கட்டப்பட்ட வைணவ கோயில் இது ஒன்றுதான். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. இது ஒருமாடக்கோயில்(யானை ஏற முடியாத கோயில்). இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும். இந்ததலத்தில் வஞ்சுளவல்லி தாயாருக்கே முதலிடம் எனவே தான்  நாச்சியார்கோயில் என அழைக்கப்பட்டது.
தல வரலாறு:
மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும், என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில்  என்ற பெயரும் பெற்றது.






         கல் கருடபகவான் சிறப்புகள் :
மூலவர் கருவறைக்கு இடது புறம் உள்ள நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் . முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.
கருடாழ்வார்  உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால், இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.


                தலபெருமை:
திருமங்கையாழ்வாருக்கு அருளிய பெருமாள்  நீலன் எனும் குறுநிலமன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்தபோது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து "முத்ராதானம்' செய்து வைத்தார். (முத்ராதானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக்கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும்,  சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக்கொண்டதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை, "நம்பி' என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப்பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்துள்ளார்.
சாவிக்கொத்துடன் தாயார்: ஸ்ரீரங்கம் கோயில், ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பதுபோல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
நிர்வாக அதிகாரி, அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.
   பாடல் :
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
-திருமங்கையாழ்வார்.
திருவிழா:
மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 14 வது திவ்ய தேசம்.
இங்குள்ளமூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் கீழே நவக்கிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் இருக்க, அருகில் மேதாவி அவரை வணங்கியபடி உள்ளார். கருட சன்னதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கிறது.



பிரார்த்தனை

வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.





No comments:

Post a Comment