Breaking

Tuesday, March 14, 2017

Navagraha temple a vision -tamilsearch.tk

             நவகிரக கோயில்
          
  1. சூரியன் பகவான்
மூலவர் : சிவசூர்யன்
அம்மன்/தாயார்:உஷாதேவி,சாயாதேவி
தலவிருட்சம்:வெள்ளெருக்கு
தீர்த்தம்:சூரியதீர்த்தம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் :சூரியனார் கோயில்
        தல வரலாறு :
                                காலவ முனிவர் என்பவருக்கும் தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி வழிபட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர். இதனை அறிந்த பிரம்ம தேவர் கோபம் கொண்டார்.சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பிடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார். அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். பலவகைத் துன்துன்பங்களை பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுக்கிரகம் செய்வீர்களாக என அருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறு ஆகும்.


            
  2. சந்திர பகவான்
மூலவர் : கைலாசநாதர்
அம்மன் /தாயார் : பெரிய நாயகி
தலவிருட்சம் : வில்வ மரம்
பழமை :1000 -2000 வருடங்களுக்கு மேலாக இருக்கும்
ஊர் :திங்களூர்
          
         தலவரலாறு :
                                திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய பெரியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் பற்றி யாருக்காவது தெரியுமா? இவர்களை தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும். அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் "முருகன், கந்தன், கார்த்திகேயன்' என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு "மூத்த திருநாவுக்கரசு', இளையவனுக்கு "இளைய திருநாவுக்கரசு' என்று. தன்னை விட தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார்.

மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது
                   
              3. செவ்வாய் பகவான்

மூலவர் : வைத்தியநாதர்
அம்மன் /தாயார் : தையல்நாயகி
தலவிருட்சம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்தம்
ஊர் :வைத்தீஸ்வரன் கோயில்

                 தல வரலாறு :
                                     அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது.அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.

1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.

2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .

3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.

4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.

5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது

.
               தல சிறப்பு  : 
                       சித்தாமிர்த தீர்த்தம்: இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.


புள்ளிருக்கு வேளூர்: வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.புள் - சடாயு என்ற பறவையும், இருக்கு - இருக்கு என்ற வேதமும் வேள் - முருகப்பெருமானும், ஊர் - சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது.


நோய் தீர்க்கும் திருச்சாந்து: 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி,  பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும்.


வைத்தியநாதர் பல மாநில மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார். கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.  வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார். முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.


செவ்வாய் தோஷ நிவர்த்தி: இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் திசை 7 வருடம் நடக்கும். நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.


செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.


சடாயுகுண்டம்: இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.


செல்வ முத்துக்குமாரர்: வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.  செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.


முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும். மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது. நவகிரக தலங்களில் இது அங்காரக தலம் ஆகும்.


            
   4. புதன் பகவான்
மூலவர் : சுவேதாரண்யேஸ்வரர்
அம்மன் /தாயார் : பிரமவித்யாம்பிகை
தலவிருட்சம் : கொன்றை, வில்வம்
தீர்த்தம் : முக்குளம் தீர்த்தம்
ஊர் : திருவெண்காடு

                 தல வரலாறு : பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.




               
     5. குருபகவான்
மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
உற்சவர் :தெட்சிணாமூர்த்தி
அம்மன் /தாயார் : ஏலவார்குழலி
தலவிருட்சம் : பூளை என்னும் செடி
தீர்த்தம் : பிரமதீர்த்தம்,
ஊர் : ஆலங்குடி
             
            தல வரலாறு :
 
சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார்.

                    6. சுக்கிரன் பகவான் 
மூலவர் : அக்னீஸ்வரர் 
அம்மன் / தாயார் : கற்பகாம்பாள் 
தலவிருட்சம் : பலா, புரசு
தீர்த்தம் : அக்னிதீர்த்தம் 
ஊர் : கஞ்சனூர்

        தலவரலாறு : 
                     முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது.


திருநீறு, உருத்திராக்கதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதுஅமர்ந்து "சிவமே பரம்பொருள்' என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர்.


ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்துவந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார்.  விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்குநோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.
சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார்.


இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்துவந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அவர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணி கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு' என்று அருளிச்செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

கல்நந்தி: பிராமணர் ஒருவர் புல் கட்டை தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது என்று பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும் போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்துவந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து, ""கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்'' என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டதாக வரலாறு. 

            


                  
    7. சனீஸ்வரன் பகவான்
  மூலவர் : தர்ப்பாரண்யேஸ்வரர் திருநள்ளாற்றீஸ்வரர்
அம்மன் /தாயார் : பிராணேஸ்வரி பிராணம்பிகை,போகமார்த்த பூண்முலையாள்
தலவிருட்சம் : தரப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம்
ஊர் : திருநள்ளாறு காரைக்கால்

        தல வரலாறு :
                             நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.

ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்


            
                 8. ராகு பகவான் 
மூலவர் : நாகேஸ்வரர்,நாகநாதர்
அம்மன் /தாயார் : பிறையணி வானுதலாள்
தலவிருட்சம் : செண்பகம்
தீர்த்தம் : சூரியதீர்த்தம்
ஊர் : திருநாகேஸ்வரம்
             
தல வரலாறு :
                   சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள்.


சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார்


                   9. கேது பகவான்
  
  மூலவர் :நாகநாதர்
அம்மன் / தாயார் : சவுந்தர்யநாயகி
தலவிருட்சம் : மூங்கில்
தீர்த்தம் : நாகதீர்த்தம்
ஊர் : கீழப்பெரும்பள்ளம்
தல வரலாறு :
                   தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.

வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்' என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.



No comments:

Post a Comment